கோழிவிளை - மருதங்கோடு சாலையில் சுகாதாரச் சீர்கேடு
களியக்காவிளை அருகே கோழிவிளை - மருதங்கோடு சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
களியக்காவிளை அருகே கோழிவிளை - மருதங்கோடு சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
முன்சிறை ஊராட்சி ஒன்றியம், குளப்புறம் ஊராட்சிக்கு உள்பட்ட கோழிவிளை - மருதங்கோடு சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கோழிவிளை இலங்கை தமிழ் அகதிகள் முகாமிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இச் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இந்தக் கழிவுநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது; அப்பகுதியிலுள்ள புளியங்குளமும் பயன்படுத்த முடியாத வகையில் பாழடைந்து காணப்படுகிறது.
ஆகவே அகதிகள் முகாமிலிருந்தும், இறைச்சிக் கடைகளிலிருந்தும் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்காதவாறு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.