குமரியில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
கன்னியாகுமரியில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரியில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கருணாகரன் தலைமை வகித்தார். அகஸ்தீசுவரம் வட்டார அலுவலர் பிரவீன்ரகு வரவேற்றார். பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
இப்பேரணியில் பெருமாள்புரம் குமாரசுவாமி நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று காவல் நிலையம், சர்ச் ரோடு சந்திப்பு வழியாக விழிப்புணர்வு கோஷங்களுடன் விவேகானந்த கேந்திரத்தில் நிறைவு செய்தனர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் கருணாகரன் கூறியது: குமரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடர்பாக 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ. 2.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் அதிகமாக மக்கள் வந்து செல்வதால் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கன்னியாகுமரியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் விலைப்பட்டியல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரமற்ற உணவுப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள், மாணவர்கள் 94440-42322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் -அப்) தகவல் அனுப்பலாம். புகார் அனுப்புவோர் பெயர்கள் பாதுகாக்கப்படும். இந்தியாவில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 3 சதவீதம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.