திக்குறிச்சி தர்ம சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழா நாளை தொடக்கம்
மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், பங்குனி உத்திர
மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், பங்குனி உத்திர திருவிழாவும் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாள் காலையில் அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து நவசக்தி ஹோமம் மற்றும் சிறப்பு யாகங்களும் நடைபெறுகின்றன. காலை 9.10 மணிக்கு மேல் அஷ்டபந்தன புனர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.
தொடர்ந்து கலசாபிஷேகம், பிரசன்னபூஜை, அலங்கார தீபாராதனைக்குப் பின், கும்பாபிஷேக வாழ்த்தரங்கில் வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆஸ்ரமம் சுவாமி கருணானந்தஜி ஆசி வழங்கி பேசுகிறார். நண்பகல் 12.10 மணிக்கு மேல் கோயில் தந்திரி செழுங்கானூர்மடம் தினேசன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும்.
விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளும், மதியம் அன்னதானமும் நடைபெறும். 3 ஆம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு சமயவகுப்பு மாணவர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறும். 4 ஆம் நாள் மற்றும் 5 ஆம் நாள் விழாக்களில் இரவு 7.30 மணிக்கு சமய மாநாடு நடைபெறும். விழா நிறைவு நாளான மார்ச் 4 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திக்குறிச்சி சிவன் கோயிலில் இருந்து ஆறாட்டு ஊர்வலம் மற்றும் தீப ஊர்வலம் நடைபெறும். இரவு 8 மணிக்கு மேல் திருக்கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.