கன்னியாகுமரி - காஷ்மீர் கல்வி விழிப்புணர்வு ரத யாத்திரை தொடக்கம்
மாணவர்களுக்கு தரமான, அறிவியல் பூர்வமான, பாகுபாடற்ற கல்வி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில்
மாணவர்களுக்கு தரமான, அறிவியல் பூர்வமான, பாகுபாடற்ற கல்வி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் காஷ்மீர் வரையிலான ரத யாத்திரை கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்திய மாணவர் சங்க தேசியத் தலைவர் ஷானு தலைமை வகித்தார். பொதுச் செயலர் விக்ரம் சிங் யாத்திரையைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கல்விக்கான சலுகைகள் குறைந்துள்ளன. தரமான கல்வி வழங்கப்படாததால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் விளைவாக இந்தியா முழுவதும் ஏராளமான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலை மாற வேண்டும். அனைவருக்கும் தரமான, அறிவியல்பூர்வமான, பாகுபாடற்ற கல்வி வழங்கப்படவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் இந்த ரதயாத்திரை நடைபெறுகிறது என்றார் அவர்.
இந்த யாத்திரை தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தரகண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக காஷ்மீரைச் சென்றடைகிறது.
விழாவில், இந்திய மாணவர் சங்க தமிழகத் தலைவர் கண்ணன், செயலர் மாரியப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் காவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.