குமரி மாவட்டத்தில் நாளை சுனாமி பேரிடர் ஒத்திகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை (செப். 5) சுனாமி பேரிடர் ஒத்திகை நடைபெறுகிறது. பொதுமக்கள் இது குறித்து பீதியடைய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை (செப். 5) சுனாமி பேரிடர் ஒத்திகை நடைபெறுகிறது. பொதுமக்கள் இது குறித்து பீதியடைய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு நிறுவனமான இன்காய்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுனாமி பேரிடர் ஒத்திகை நிகழ்வை நடத்தி வருகிறது.
நிகழாண்டு வரும் 5ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரிடர் ஒத்திகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையின் நோக்கமானது பேரிடரின்போது தகவல் தொடர்புகளின் துரிதத்தை பரிசோதனை செய்வதும், பேரிடரின் போது தொடர்புடைய துறைகளான வருவாய், தீயணைப்பு, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மருத்துவத் துறை, மீன்வளத் துறை,பொதுப்பணித் துறை, மின்துறை,தொலைத் தொடர்புத்துறை உள்பட அனைத்து துறைகளின் துரித நடவடிக்கைகளை ஆய்வு செய்து பேரிடர் காலங்களில் மேலும் சிறப்பாக பணி செய்ய திட்டங்கள் தயாரிப்பதும் ஆகும். மக்கள் பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கான ஒத்திகையும் வழங்கப்படும்.
செப். 5 ஆம் தேதி குமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டம், லெட்சுமிபுரம் கிராமம், கொட்டில்பாடு, அகஸ்தீஸ்வரம் வட்டம், லீபுரம் கிராமம், ஆரோக்கியபுரம் ஆகிய கடற்கரைக் கிராமங்களில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பேரிடர் ஒத்திகை நடைபெறும்.
பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் காலங்களில் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்வார்கள்.
அன்று கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மேற்படி இரண்டு கிராம மக்களையும் பாதுகாப்பான பல்நோக்கு முகாம்களுக்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பொதுமக்கள் இதில் முழுமையாக கலந்துகொண்டு துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.