வடசேரியில் வீட்டில் பதுக்கிய 2 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்
நாகர்கோவில் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரின் வீட்டில் இருந்து 2 கள்ளத் துப்பாக்கிகளை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரின் வீட்டில் இருந்து 2 கள்ளத் துப்பாக்கிகளை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில், வடசேரி அருகேயுள்ள கீழகலுங்கடி பகுதியில் ஒரு வீட்டில் கள்ளத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை காலை அந்த வீட்டுக்கு போலீஸார் சென்றனர். இதை அறிந்து வீட்டினுள் இருந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அந்த வீட்டை போலீஸார் சோதனை செய்ததில், 2 கள்ளத் துப்பாக்கிகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி போலீஸார் விசாரித்ததில், தப்பியோடியவர் ஷஜூ (28) என்பதும், கடந்த 2016 ஆம் ஆண்டு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் பூதப்பாண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்தவர் எனவும் தெரியவந்தது. தலைமறைவான ஷஜூவை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், துப்பாக்கி எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.