கோவாவில் ரூ. 4 கோடி மதிப்பில் தயாரான புதிய படகான தாமிரபரணி, குமரி வருகை
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் கோவாவில் தயாரான ஏசி வசதியுடன் கூடிய புதிய படகு சனிக்கிழமை கன்னியாகுமரி வந்தடைந்தது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் கோவாவில் தயாரான ஏசி வசதியுடன் கூடிய புதிய படகு சனிக்கிழமை கன்னியாகுமரி வந்தடைந்தது.
கன்னியாகுமரி கடலில் இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா நினைவு மண்டபம் மற்றும் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் எம்.எல். பொதிகை, எம்.எல். குகன், எம்.எல். விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கி வருகிறது. சீசன் இல்லாத காலங்களில் பயணிகள் நெரிசல் இன்றி இவைகளை பார்வைட்டு வருகின்றனர். ஆனால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் கோடைசுற்றுலா சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.
கூடுதல் படகுகள்: இதுபோன்ற நெருக்கடி காலங்களில் கூடுதல் படகுகள் இயக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக நிர்வாகம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மூன்று படகுகள் போக மேலும் கூடுதலாக எம்.எல். தாமிபரணி, எம்.எல். திருவள்ளுவர் என்ற பெயரில் இரண்டு சொகுசுப் படகுகள் வாங்க சுமார் ரூ. 8.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கோவாவில் உள்ள தனியார் படகுகட்டுமான நிறுவனம் சார்பில் படகுகட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், எம்.எல். தாமிரபரணி படகு முழுமை பெற்றுள்ளது. இப்படகு சனிக்கிழமை கன்னியாகுமரி பூம்புகார் படகுதளத்தை அடைந்தது.
இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி செல்லும் பணியில் தற்போது மூன்று படகுகள் ஈடுபட்டுள்ளது. சீசன் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் நீண்டநேரம் காத்திருப்பதால் பயணிகள் நலன்கருதி, புதிதாக இரண்டு படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டு ரூ. 8.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதில் ரூ. 4 கோடி மதிப்பிலான எம்.எல். தாமிரபரணி படகு பணி முடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படும். மற்றொரு படகான எம்எல். திருவள்ளுவர் 99 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது. இப்படகும் விரைவில் கன்னியாகுமரி வரவுள்ளது.
இப்படகுகள் சுமார் 26 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும், ஒரு நேரத்தில் 75 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஏசி வசதியுள்ள இந்த படகளை இயக்குவது மற்றும் உரிய அனுமதிக்காக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தற்போது படகுத்துறை கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் படகுத்துறையில் புதிய படகினை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக கன்னியாகுமரி வந்துள்ள புதிய படகினை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.