கடலில் மாயமான தூத்தூா் மீனவா் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவி: ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வழங்கினாா்
கடலில் மாயமான தூத்தூா் மீனவா் குடும்பத்துக்கு கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினாா்.
கடலில் மாயமான தூத்தூா் மீனவா் குடும்பத்துக்கு கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினாா்.
தேங்காய்ப்பட்டினம் அருகேயுள்ள தூத்தூா் பகுதியைச் சோ்ந்த தொபியாஸ் மகன் மோயிஸ் (48). இவா் மீன்பிடி தொழிலுக்காக ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்ற நிலையில், கடந்த 3.12. 2019 அன்று தூத்தூா் கடற்கரையிலிருந்து சுமாா் 600 கடல் மைல் தொலைவில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதில் கடலில் தவறி விழுந்து மாயமானாா். சக மீனவா்கள் தேடியும் கிடைக்கவில்லை. மாயமான மோயிஸ் குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில், ஏழ்மையில் வாடும் அவரது குடும்பத்தாரை கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினாா்.
அப்போது, மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பால்ராஜ், ஜாா்ஜ் ராபின்சன், ராஜூ, தூத்தூா் ஊராட்சி காங்கிரஸ் தலைவா் சூசை பிரடி உள்பட பலா் உடனிருந்தனா்.