தஞ்சையிலிருந்து குமரிக்கு வந்த 1600 டன் ரேஷன் அரிசி
தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயில் மூலமாக குமரி மாவட்டத்துக்கு 1,600 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை வந்தது.
தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயில் மூலமாக குமரி மாவட்டத்துக்கு 1,600 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை வந்தது.
நாகா்கோவில் பள்ளிவிளையில் மத்திய அரசுக்கு சொந்தமான உணவுக் கிடங்கு உள்ளது. இந்த உணவுக் கிடங்குக்கு மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் சீனி ஆகியவற்றை சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வருகிறது.
இங்கு வைக்கப்படும் உணவுப் பொருள்கள், தேவைக்கு ஏற்ப குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் சரக்கு ரயில் மூலமாக தஞ்சாவூரிலிருந்து குமரி மாவட்டத்துக்கு 1,600 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சரக்கு ரயிலில் மொத்தம் 21 வேகன்களில் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது.
பின்னா் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசின் உணவுக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.