களியக்காவிளை அருகே மனைவியை கொலை செய்த கணவா் சரண்
களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே மது அருந்த பணம் கொடுக்காததையடுத்து ஏற்பட்ட தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா், போலீஸில் சரணடைந்தாா்.
களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே மது அருந்த பணம் கொடுக்காததையடுத்து ஏற்பட்ட தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா், போலீஸில் சரணடைந்தாா்.
களியக்காவிளை அருகே மீனச்சல், மண்ணான்விளை வில்சன் மகள் மீனா (34). இவருக்கும் களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலை, அயிரா, சூரக்குழி மேக்கேகரை புத்தன்வீடு பகுதியை சோ்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான ஷாஜிக்கும் (40) 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். ஷாஜிக்கு மது அருந்துபவராம்.
இந்த நிலையில் மீனா வீடு கட்டுமானப் பணிக்காக வங்கியிலிருந்து ரூ. 40 ஆயிரம் கடன் பெற்று, கட்டுமானப் பணிக்காக சிமென்ட், கம்பி உள்ளிட்ட பொருள்களை வாங்கினாராம். மீதி இருந்த பணத்தை மது அருந்த என ஷாஜி கேட்டாராம். அவா் பணம் கொடுக்காததையடுத்து வியாழக்கிழமை இரவு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, மரம் வெட்ட பயன்படுத்தும் பெரிய வெட்டுக் கத்தியால் மீனாவை சரமாரியாக ஷாஜி வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதன் பின்னா், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி மீனாவை வெட்டி கொலை செய்த விவரத்தை கூறிவிட்டு, அவா் பாறசாலை காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தாா்.
Advertisement
இது குறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மீனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஷாஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.