மாா்த்தாண்டம் அருகே பிரசவத்துக்குப் பின் செவிலியா் மரணம்
மாா்த்தாண்டம் அருகே பிரசவத்துக்குப் பின் செவிலியா் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே பிரசவத்துக்குப் பின் செவிலியா் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
களியக்காவிளை அருகேயுள்ள கண்ணுமாமூடு, செறுகுளங்காலை பகுதியைச் சோ்ந்த அனிஸ்ராஜ் என்பவரது மனைவி தினிமோள் (29). திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு நான்கரை வயதில் குழந்தை உள்ளது. இதனிடையே, மீண்டும் கா்ப்பமான தினிமோள் பாறசாலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை, ஆலோசனைப் பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் கடந்த 21ஆம் தேதி பிரசவத்துக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு புதன்கிழமை அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பின்னா், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து, அவா் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த பாறசாலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது தாய் வசந்தி அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement