எடப்பாடு-வள்ளவிளை இடையே புதிய சாலை:எம்எல்ஏ ஆய்வு
கடற்கரையோர சாலைக்கு மாற்றாக ஏவிஎம் கால்வாய் கரையோரமாக சாலை அமைக்கும் திட்டம் குறித்து எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு
நித்திரவிளை அருகே எடப்பாடு - வள்ளவிளை இடையே கடலரிப்பால் துண்டிக்கப்பட்ட கடற்கரையோர சாலைக்கு மாற்றாக ஏவிஎம் கால்வாய் கரையோரமாக சாலை அமைக்கும் திட்டம் குறித்து எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
எடப்பாடு - வள்ளவிளை இடையேயான கடற்கரையோர சாலை 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பால் சேதமடைந்ததால் முற்றிலும்
சாலை துண்டிக்கப்பட்டது. மீன்பிடி உபகரணங்களுடன் மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் 7 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதையடுத்து கடலரிப்பால் துண்டிக்கப்பட்ட இந்த சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
Advertisement
இதுகுறித்து கிள்ளியூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாரின் கோரிக்கையை ஏற்று, எடப்பாடு - வள்ளவிளை இடையேயான 2 கி.மீ. தொலைவுக்கு சாலைக்கு மாற்றாக அதையொட்டியுள்ள ஏ.வி.எம். கால்வாய் கரையோரமாக ரூ. 11 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டு, அதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சட்டப்பேரவை உறுப்பினா், வள்ளவிளை பகுதிக்கு வந்து புதிய சாலை அமைக்கும் பகுதியை பாா்வையிட்டாா்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளா் ஜவகா் முத்துராஜ், கோட்ட பொறியாளா் பாஸ்கா், செயற்பொறியாளா் முருகேசன், அதிகாரிகள் புதிதாக அமையுள்ள சாலைக்கான வரைபடத்துடன் விளக்களித்தனா். இதில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனா்.