ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்
ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து கமல் கூறியிருப்பதாவது...
நடிகரும் எம்பியுமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது விபத்து அல்ல; அது நிர்வாகத்தின் தோல்வி” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமாக நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையினால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த விவாகரத்தில் திரைத்துறையினர் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து நடிகரும் எம்பியுமான கமல் ஹாசன் கூறியிருப்பதாவது:
Advertisement
ஜன நாயகன் கசிந்தது விபத்து அல்ல; அது நிர்வாகத்தின் தோல்வி. சரியான நேரத்தில் தணிக்கை முடிந்திருந்தால், நாம் இங்கிருந்திருக்க மாட்டோம். எதிர்பார்த்ததை விட மிக அதிகமான தாமதம் தணிக்கைச் சான்றிதழில் உருவானதால், திருட்டு வழிவகுத்தது.
சட்டப்பூர்வமான ஒன்றைச் செய்வதைத் தவிர்க்கும்போது, புறம்பானவர்கள் அதை எடுத்துக்கொள்கிறார்கள். இந்தத் திருட்டு, அரசியலைத் தாண்டியது; இது கலை மீதும் கலைஞர்கள் மீதான தாக்குதல்.
100க்கும் மேற்பட்ட, கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நேர்மையாக வரி செலுத்தும் தயாரிப்பாளர்களின் முதலீடு, வெளியீட்டாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், சினிமாவை நேசிப்பவர்களுக்கும் இது அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
நிர்வாகம் தோல்வியுற்றால் படைப்பாளரை யார் காப்பாற்றுவது? நமக்கு பொறுப்பாளர்கள் தேவை. விரைவான தணிக்கைச் சான்றிதழ் வேண்டும், கடுமையான தண்டனை, உடனடியாக திருட்டை தடுக்க வேண்டும். உண்மையான சினிமா விரும்பிகள் ஒன்றிணைந்து, திரையரங்கில் மட்டுமே படத்தைப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். முன்னதாக எனக்கு ஆதரவளித்தது போல இந்த விஷயத்திலும் இருப்பீர்கள் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.