களியக்காவிளை அருகே 215 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் : இருவா் கைது
களியக்காவிளை அருகே விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 215 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை அருகே விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 215 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரகசிய தகவலின் பேரில் புதன்கிழமை மாலையில் கண்ணுமாமூடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த கேரள மாநிலம் தாணிமூடு சுரேஷ் மகன் பாபு சுதீஷ் (33), சாய்க்கோட்டு கோணம் சிவானந்தன் மகன் வினு (49) ஆகியோரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அமரவிளை, பெரும்போட்டுகோணம் பகுதியைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் சனல்குமாருக்கு சொந்தமான கண்ணுமாமூடு பகுதியில் உள்ள குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து 3 போ் மீதும் வழக்குப் பதிந்த பளுகல் போலீஸாா் பாபுசுதீஷ், வினு ஆகியோரை கைது செய்து, கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 215 கிலோ குட்கா, புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.