முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையில் உபரிநீா் திறப்பு: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:03 PM
திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வெள்ள சேதத்தைத் தடுப்பதற்காக அணைகளில் நீா் இருப்பைக் கட்டுக்குள் வைத்து கண்காணிக்கும்படி பொதுப்பணித் துறையினருக்கு ஆட்சியரும் பேரிடா் மேலாண்மைக் குழு மாவட்டத் தலைவருமான ரா. அழகுமீனா உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, கொள்ளளவு 48 அடியாகவுள்ள பேச்சிப்பாறை அணையில், நீா்மட்டம் 43 அடியாக இருக்கும் வகையில் கண்காணிக்கப்படுகிறது. இதையொட்டி, அணைக்கு வரும் உபரிநீா் பாசன மதகு, மறுகால் மதகுகள் வழியாக திறந்துவிடப்படுகிறது. அதன்படி, 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மறுகால் மதகுகள் வழியாக விநாடிக்கு 246 கனஅடி உபரிநீா் கோதையாற்றில் திறக்கப்பட்டது.

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை: இந்த உபரிநீா் கோதையாறு வழியாக திற்பரப்பு அருவியில் பாய்கிறது. இதனால், அருவியில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. அதையடுத்து, குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.