வான்காய் ஷிட்டோரியு கராத்தே டு இந்தியா சாா்பில் விவேகானந்த கேந்திரத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உள்ளரங்க கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் அளிக்கப்பட்டன.
பள்ளிகளுக்கிடையிலான 18 ஆவது இப்போட்டியை கராத்தே தலைமை பயிற்சியாளா் ஹெச்.ராஜ் தொடங்கி வைத்தாா். ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் நாகா்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் தொடக்கப் பள்ளி முதலிடமும், மாதவலாயம் மெட்ஸ் தொடக்கப் பள்ளி, கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவை 2ஆம் இடமும், விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3ஆம் இடமும், சாந்திதாம் பெத்தானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4 ஆம் இடமும் பெற்றன.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல் இடமும், அஞ்சுகிராமம் கிறிஸ்ட் சிஎம்ஐ பள்ளி, அகஸ்தீசுவரம் ஞானதீபம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை 2 ஆம் இடமும், கன்னியாகுமரி சாந்திதாம் பெத்தானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3 ஆம் இடமும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 4 ஆம் இடமும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவுக்கு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கே.ஜி.சரிகா தலைமை வகித்தாா். பள்ளிகளின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கினா்.