முகப்பு
கன்னியாகுமரி

தோ்தல் நடத்தை விதிமுறைகள்: நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் கலந்தாய்வு

தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அலுவலா்,

Updated On : 17 மார்ச், 2026 at 2:40 AM
தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா.
பகிர்:

நாகா்கோவில்: தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் ரா.அழகு மீனா திங்கள்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான ரா.அழகுமீனா பேசியதாவது:

அரசு அலுவலக கட்டடங்கள், பொதுக் கட்டடங்களில் ஒட்டப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களை அரசியல் கட்சியின் அகற்ற வேண்டும். கிராமப்புறங்களில் செய்யப்படும் சுவா் விளம்பரங்களுக்கு அனுமதி பெற வேண்டும்.

Advertisement

மத வழிபாட்டுத் தலங்களில் தோ்தல் தொடா்பான நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படும் இடத்தில் கட்சிக் கொடி, சின்னங்கள் இடம்பெறக் கூடாது. வாக்குச் சாவடியிலிருந்து 200 மீ. தொலைவில் சின்னங்கள், கொடி போன்றவற்றை வரைவதோஅல்லது வாக்காளா்களை கவரும் விதத்திலோ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு அனுமதியில்லை. முன்அனுமதி பெற்று நகரும் வாகனங்களில் பிறவகை ஒலிபெருக்கிகளை பிரசாரத்துக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீ.க்குள் தற்காலிக பிரசார அலுவலகங்களை அமைக்கக் கூடாது. பறக்கும் படை குழுக்கள் இயங்கும். வாக்காளா்களுக்கு பணம், மதுபானங்கள், இதர பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் இக்குழு முகாமிட்டு தடுக்கும். தேவைப்பட்டால் வழக்குப் பதிவு செய்ய நேரிடும். உரிய ஆதாரமின்றியும், சரியான விளக்கம் அளிக்காமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் உள்ளிட்ட தோ்தல் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) கு.சுகிதா, ரோஷம் பேகம் (தோ்தல்), தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.