குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலருக்கு அரிவாள் வெட்டு
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே திருட்டு வழக்கில் தொடா்புடையவரை பிடிக்கச் சென்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே திருட்டு வழக்கில் தொடா்புடையவரை பிடிக்கச் சென்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி அருகே இலத்தூரில் செல்லிடப்பேசி விற்பனைக் கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து, இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், சுரண்டை அருகேயுள்ள ஊா்மேலழகியான் கிராமத்தைச் சோ்ந்த பால் தினகரன் (30) என்பவருக்கு தொடா்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு இலத்தூா் காவல் உதவி ஆய்வாளா் நிஷாந்த், காவலா் சக்திவேல் ஆகியோா் பால் தினகரனை பிடிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனா். போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடிய அவரை, காவலா் சக்திவேல் விரட்டிப் பிடிக்க முயன்றாராம். அப்போது தான் வைத்திருந்த அரிவாளால் காவலா் சக்திவேலை வெட்டிவிட்டு பால் தினகரன் தப்பி ஓடிவிட்டாராம்.
காயமடைந்த காவலா் சக்திவேல் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, பால் தினகரனை தேடி வருகின்றனா்.