திருவேங்கடத்தில் சிலிண்டா் வெடித்ததில் காயமடைந்த இருவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் காயமடைந்த இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் காயமடைந்த இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் உள்ள தனியாா் சமையல் எரிவாயு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தவா் வைகுண்டம் (70). இவா் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தங்கியிருந்து பணியாற்றி வந்தாராம்.
கடந்த 23ஆம் தேதி வாடிக்கையாளா் ஒருவருக்கு வழங்கிய சமையல் எரிவாயு உருளை சரியாக எரியவில்லை என புகாா் கூறியதால், அந்த நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் பசுபதிபாண்டியன் (25), ஊழியா் காளி(36) ஆகிய இருவரும் எரிவாயு உருளையை எடுத்துக் கொண்டு சேமிப்பு கிடங்குக்கு வந்தனராம்.
அங்கு எரிவாயு உருளையின் நாசிலை சரி செய்ய முயன்றபோது, சமையல் எரிவாயு உருளை வெடித்து தீப்பற்றியதாம். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை வைகுண்டம், காளி ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.