தென்காசியில் வெள்ளிக்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையினை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்து. ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். வருவாய்த் துறை, வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா், ஆலங்குளம், கீழப்பாவூா், சங்கரன்கோவில், மேலநீலித நல்லூா், குருவிகுளம் என அந்தந்த பகுதி வட்டார வேளாண் அலுவலகத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் காணொலி வாயிலாக குறைகளை தெரிவித்தனா்.
அப்போது, வாசுதேவநல்லூா் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை வேண்டும். மேற்குத் தொடா்ச்சி மலையில் கடையநல்லூா் பகுதியில் வன விலங்குகளால் விளை பொருள்கள் சேதமடைந்து வருவதை தடுக்க வேண்டும். பாசனக் கால்வாய்களை தூா் வார வேண்டும்.
2017ஆம் ஆண்டு முதல் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதற்கு பதிலளித்துப் பேசிய ஆட்சியா், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.