தென்காசி மாவட்டம், தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் திருக்கல்யாணத் திருவிழாவும் அடங்கும். திங்கள்கிழமை அதிகாலை 5.10க்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன், வழக்குரைஞா் செந்தூா்பாண்டியன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவில் நவ.7 ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது. நவ.9 ஆம் தேதியன்று காலை 8.20க்கு யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலையில் தெற்குமாசி வீதியில் காசிவிஸ்வநாதா் உலகம்மனுக்கு தபசுக்காட்சிகொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் நாள்தோறும் காலை, இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
மாலையில் மண்டகப்படிதாரா்களின் சமய சொற்பொழிவு, மண்டகப்படி தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இரா.முருகன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.