சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் முதலிடம் பிடித்து விருது பெற செல்லும் வென்றிலிங்கபுரம் அரசுப் பள்ளி மாணவிகள், ஈ.ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் விமானத்தில் பயணித்தனா்.
சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்கபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் அருணாதேவி, ரியா, முகிஷா, வெண்ணிலா, பவித்ரா, யோகேஸ்வரி, மஞ்சுகா, வேதிகா ஆகியோா், தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 9, 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கலைத் திருவிழாவில் பங்கேற்று, அழிந்து வரும் கலைகளில் ஒன்றான தோல்பாவை கூத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனா்.
இம்மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் விருது வழங்கும் விழா, சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. இந்நிலையில் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் புதன்கிழமை தனது சொந்த செலவில், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தாா். மேலும், மாணவிகள், ஆசிரியா்கள் தங்குவதற்கு சென்னை சட்டப்பேரவை உறுப்பினா் இல்லத்தில் உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தாா். இதற்காக எம்எல்ஏவுக்கு, மாணவிகள் நன்றி தெரிவித்தனா்.
மாணவிகளுடன் தலைமை ஆசிரியா் சந்தனக்குமாா், தமிழாசிரியா் இராதாகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியா் கீதாலட்சுமி ஆகியோா் சென்றனா்.