மாநகரில் கால்நடைகளால் விபத்துகள் அதிகரிப்பு
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணமான
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணமான கால்நடை வளர்ப்போர் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் முறையாக வீடுகளில் கட்டிப்போட்டு வளர்க்காமல் சாலைகளில் சுற்றித் திரிய விடுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், பெருமாள்புரம், திருநெல்வேலி நகரம், புதிய பேருந்துநிலையம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, கே.டி.சி. நகர், வி.எம்.சத்திரம் சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவ்வாறு சாலைகளில் நிற்கும் கால்நடைகளை இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனிக்காமல் மோதி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. திருநெல்வேலி தெற்குப்புறவழிச்சாலை, வடக்குப்புறவழிச்சாலைகளில் கனரகவாகனங்கள் மோதி கால்நடைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நேரிட்ட விபத்தில் சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான எருமை உயிரிழந்தது.
மாநகராட்சி சார்பில் முருகன்குறிச்சி, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பாதுகாப்பு பகுதிகளில் முறையான பராமரிப்பு செய்து, விதிமீறி சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.