சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் 23-வது நாளாக வேலைநிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி, திங்கள்கிழமை 23 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரூ. 9.20 கோடி
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி, திங்கள்கிழமை 23 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரூ. 9.20 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் 5000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் வீடுசார்ந்த சிறு விசைத்தறியாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். அதன்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 28.04.2018 அன்றுடன் முடிந்துவிட்டது.
இதனால், விசைத்தறித் தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு மற்றும் தேசிய விடுப்புச் சம்பளம் ரூ. 300 வழங்கக் கோரி, கடந்த 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமையுடன் 23 ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பேரணி போன்ற போராட்டங்களை நடத்தி வரும் இவர்கள், புதன்கிழமை குடும்பத்துடன் பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே, கூலி உயர்வு தொடர்பாக சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 3 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ரூ. 9.20 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத் தொழிலாளர்களுக்கு சுமார் ரூ. 6.90 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விசைத்தறித் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருமானம் இல்லாததால், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும், வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே, அரசு உடனடியாக இதில் தலையிட்டு, கூலி உயர்வு குறித்து நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலாவது தீர்வுகாண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.