ஓடையில் தண்ணீர் குடித்த விவசாயி சாவு
சுத்தமல்லி அருகேயுள்ள பழவூரில் வயலுக்கான பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதை அறியாமல், ஓடையில் தண்ணீர் குடித்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
சுத்தமல்லி அருகேயுள்ள பழவூரில் வயலுக்கான பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதை அறியாமல், ஓடையில் தண்ணீர் குடித்த விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பழவூர் மேலத்தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரிமூர்த்தி (27). இவர், சில தினங்களுக்கு முன்பு தனது வயலின் அருகேயுள்ள ஓடையில் தண்ணீர் குடித்தாராம். அந்தத் தண்ணீரில் வயலுக்கு அடிக்கப்பட்டிருந்த பூச்சிமருந்து கலந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வயலுக்குள் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
விவசாயிக்கு வெட்டு: மேலமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் வேலுச்சாமி (52). விவசாயி. இவர், ஒரு வழக்கில் கைதாகி, சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேலுச்சாமியை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியதாம். பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவங்கள் குறித்து முறையே சுத்தமல்லி, முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.