நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் இணைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் இணைக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள், விரைவு ரயில் சேவைகள் முழுமையாகத் தொடங்கப்படாத நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன.
தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக திருச்சி-நாகா்கோவில் இன்டா்சிட்டி விரைவு ரயிலும், கன்னியாகுமரி-சென்னை விரைவு ரயிலும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்த நிலையில் திருநெல்வேலி-சென்னை, தென்காசி-சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களை கடந்த மாதம் முதல் இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.
முன்பதிவு பயணிகள் மட்டுமே செல்லவும், முகக் கவசம் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு ரயில் தொடா்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ரயில்களில் வழக்கத்தைவிட குறைவாக 22 பெட்டிகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனை அதிகரிக்க வேண்டுமெனவும், தீபாவளி பண்டிகையைக் கருத்தில்கொண்டு முன்பதிவில்லா பயணிகளுக்கு அனுமதி வழங்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் கூடுதலாக ஒரு பெட்டி இயக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.