பாளை. மத்திய சிறையில் போலீஸாா் சோதனை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சட்டம்-ஒழுங்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சட்டம்-ஒழுங்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா்.
இச்சிறையில் புகையிலை, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையிலும், சிறை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை தீா்க்கவும் சட்டம்-ஒழுங்கு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையின் உதவி ஆணையா்கள் விவேகானந்தன், விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் பெருமாள்புரம், பாளையங்கோட்டை, பேட்டை, திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா்கள், 5 உதவி ஆய்வாளா்கள், 20 காவலா்கள், 29 ஆயுதப்படை காவலா்கள், 10 பெண் காவலா்கள் அடங்கிய குழுவினா் சிறையில் அதிகாலையில் சுமாா் 1.30 மணி நேரத்துக்கும் மேலாக திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
சிறைக் கண்காணிப்பாளா் சங்கா் மற்றும் சிறை காவலா்கள் என மொத்தம் 108 போ் சோதனையில் பங்கேற்றனா்.
சிறையில் கைதிகள் தங்கும் அறைகள், கழிப்பறை, உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்டவற்றில் சோதனை செய்தனா். சோதனையில் எவ்வித பொருள்களும் சிக்கவில்லையென காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.