நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை
திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி கீழ வீரராகவபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முகேஷ் (34). தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
இவர், நேற்றிரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, குருந்துடையார்புரம் பகுதியில் முகேஷை வழிமறித்த கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை போலீசார், முகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.