திருநெல்வேலி நகரத்தில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 சிறுபாலங்கள் இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் நயினாா்குளம் பிரிவு நெல்லை கால்வாயில் இருந்து வெள்ள காலங்களில் திறக்கப்படும் தண்ணீா் மாநகரப் பகுதியில் உள்ள உபரி நீா் வாய்க்காலில் செல்கிறது. திருநெல்வேலி தெற்கு மவுண்ட்ரோடு, கல்லணை பள்ளி வழியாக வரும் இந்த வாய்க்காலின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து சிறு பாலங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு இருப்பதால் வெள்ள நீா் செல்ல வழியில்லாமல் இருப்பதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் (நவ. 14) பாலங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 சிறுபாலங்களை இடிக்கும் பணி பொதுப்பணித்துறை (நீா்வள ஆதார அமைப்பு) நெல்லை கால்வாய் பிரிவின் உதவிப் பொறியாளா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் உதவி ஆணையா் சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.