முகப்பு
தூத்துக்குடி

தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி 4 மாதங்களுக்குப் பின் சாவு: தாய் மீது கொலை வழக்கு பதிவு

கோவில்பட்டியில் தாய் தீ வைத்ததில் காயத்துடன் சிகிச்சை பெற்று

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

கோவில்பட்டியில் தாய் தீ வைத்ததில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி, 4 மாதங்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து, அவரது தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் கோபால் (45). சமையல் தொழிலாளி. இவரது  மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களது மகள் மாரிச்செல்வி (13) கோவில்பட்டி அருகே அன்னை தெரசாநகரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-06-2012 அன்று விடுதியில் தங்கியிருந்த மாரிச்செல்வி, இரவு வீடு திரும்பினாராம்.  இதையடுத்து மாரிச்செல்விக்கும், அவரது தாய் ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஜுன் 12-ம் தேதி மாரிச்செல்வி உடல் மீது தாய் ராஜேஸ்வரி  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாராம். இதில் பலத்த காயமடைந்த மாரிச்செல்வி,  கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த மாரிச்செல்வி, மீண்டும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.  இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.