தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேலுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காப்புலிங்கம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காப்புலிங்கம்பட்டி ஊருக்கு வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனை செய்தனர். அங்கு ஊதா நிற கேனில் பலதரப்பட்ட பழம், வெள்ளம் மற்றும் மரப்பட்டைகள் கொண்டு ஊறல் வைத்து, கள்ளச்சாராயம் தயாரிப்பது தெரியவந்தது. அதையடுத்து, அங்கிருந்த கள்ளச்சாராயத்தை அழித்தனர். சுமார் ஒரு லிட்டர் அளவை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக, கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாணிக்கராஜாவை தேடி வருகின்றனர்.