சாத்தான்குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து ஐந்தரை பவுன் தங்க நகையைத் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சங்கரன்குடியிருப்பு மனோரம்பியபுரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். வியாபாரி. இவரது மனைவி விஜயகுமாரி (54). இவர்களது இரண்டு மகள்களுக்குத் திருமணமாகி விட்டது. இரண்டு மகன்கள் ஆந்திரத்தில் உள்ளனர். இதனால் தம்பதி வீட்டில் தனியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விஜயகுமாரி கண்விழித்து பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தங்க நகையை காணவில்லையாம். அப்போது பின் வாசல் வழியாக வந்த மர்ம நபர்கள் அவரது நகையைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விஜயகுமாரி அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.