வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிய நிலையில், மீண்டும் தூர்வாரி பராமரிப்பு செய்யப்படாததால் அண்மையில் ஒருமணி நேரம் பெய்த மழையினால் மழைநீர் வடிகாலில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கழிவுநீரோடு, மழைநீரும் கலந்து தெருக்களில் குளம்போல தேங்கி காட்சியளிப்பதால் சில இடங்களில் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் தூத்துக்குடி மாநகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிடம் இருந்து பொதுமக்களைக் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.