ஏப். 23 இல் உலக திறனாய்வு திட்ட பயிற்சி முகாம் தொடக்கம்
தூத்துக்குடி, கோவில்பட்டியில் உலக திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் ஏப். 23 ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி, கோவில்பட்டியில் உலக திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் ஏப். 23 ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், கல்வி மாவட்ட அளவிலான உலக திறனாய்வுத் திட்ட 5 நாள் பயிற்சி முகாம் ஏப். 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், தூத்துக்குடி பிரிவு சார்பில் நடத்தப்பட்ட கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் பத்து இடங்களை பெற்றவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்துக்கு காலை 6.30 முதல் 9.00 மணி வரை, தூத்துக்குடி, ஜார்ஜ் சாலையில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டரங்கிலும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை, கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி, உபகரணங்கள் வழங்கப்பட்டு, அறிவியல் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நிறைவு விழாவில், அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.