இலுப்பையூரணியில் பட்டாசு ஆலை விதிமுறைகளை மீறி செயல்படுவதாக பாமக புகார்
கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலை சட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலை சட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலர் காளிராஜ் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு அளித்துள்ள மனு விவரம்:
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி சண்முகா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி முறையாக செயல்படவில்லை என்றும், தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பின்மை, தொழிலாளர்களுக்கு சேமநல நிதி, தொழிலாளர் காப்பீட்டுறுதிக்கு முறையாகப் பணம் செலுத்துவதில்லை என்றும், தொழிலாளர்களுக்கு முறையாகவும், அரசு விதிகளுக்கு உள்பட்டும் கூலி வழங்கப்படவில்லை என்றும், ஆலை உரிமத்தை தவறுதலாகப் பயன்படுத்தி வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி இயக்குநர் சுடலைசெல்வம், உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி,சட்ட விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பாலகணேஷ், இளைஞரணி மாநிலத் துணைத் தலைவர் மகாராஜன், நகரச் செயலர் காளிதாஸ், மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.