குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா திங்கள்கிழமை (ஜூலை 15) நடைபெறுகிறது.
இதையொட்டி அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில், காலை 10 மணிக்கு திருநெல்வேலி திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுத் தலைவர் வள்ளிநாயகம் தலைமையில் காரைக்கால் அம்மையார் இயற்றிய திருமுறைப்பாடல்கள், தொடர்ந்து அம்மையாரின் வாழ்க்கை வரலாற்று பெரிய புராணப் பாடல்கள், பிற்பகல் 2 மணிக்கு திருஞானசம்பந்தரின் மழை வேண்டி மழைப் பதிகம் ஆகியன பாடப்படும்.
மாலை 4.30 மணிக்கு காரைக்கால் அம்மையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், மாங்கனி படைத்தல், பக்தர்களுக்கு மாங்கனி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். இதில் மாங்கனிகளை படைக்க விரும்புவோர் 9952110100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு வழங்கலாம். ஏற்பாடுகளை குலசேகரன்பட்டினம் இல்லங்குடி, சண்முகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.