திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
ஆளுநராகப் பதவியேற்ற பின்பு அவர் முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். இங்கு கோயில் விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநரை, கோயில் செயல் அலுவலர் எஸ்.பி. அம்ரித், உதவி ஆணையர் செல்வராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தி. தனப்ரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விருந்தினர் மாளிகையில் ஆளுநரின் கணவரான மருத்துவர் செளந்தரராஜன் வேண்டுதலுக்காக முடிகாணிக்கை செலுத்தினார். இதையடுத்து, ஆளுநர் குடும்பத்தினர் பேட்டரி வாகனம் மூலம் கிரிப்பிரகாரம் வழியாக கோயிலுக்கு வந்தனர்.
அப்போது திரிசுதந்திரர்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் விநாயகர், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்டனர்.
ஆளுநர் வருகையையொட்டி, கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் குமார் தலைமையில், திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ. பாரத் உள்ளிட்ட காவல் துறையினர், மத்திய பாதுகாப்புப் படையினர், தெலங்கானா காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.