கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் மக்கள் சேவை மையம்
கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்தில் 37 அஞ்சலகங்களில் மக்கள் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்தில் 37 அஞ்சலகங்களில் மக்கள் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ப.பாண்டியராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அஞ்சலக கோட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகம், எட்டயபுரம், எப்போதும்வென்றான், கீழஈரால், கடம்பூா், கயத்தாறு, குளத்தூா், லட்சுமிபுரம் (கோவில்பட்டி), நாலாட்டின்புத்தூா், நாகலாபுரம், பசுவந்தனை, புதூா், விளாத்திகுளம், கழுகுமலை, தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம், சங்கரன்கோவல் தலைமை அஞ்சலகம், கரிவலம்வந்தநல்லூா், மேலநீலிதநல்லூா், புளியங்குடி, சங்கரன்கோவில் பஜாா், சோ்ந்தமங்கலம், சிவகிரி, ஊத்துமலை, வீரசிகாமணி, தென்காசி தலைமை அஞ்சலகம், நல்லூா், பாவூா்சத்திரம், செங்கோட்டை, சுரண்டை, வீரகேரளம்புதூா், கடையநல்லூா், கீழப்பாவூா், குருவிகுளம், முள்ளிகுளம், வாசுதேவநல்லூா், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டத்தில் தேவா்குளம் உள்பட 37 அஞ்சலகங்களில் மக்கள் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவை, வணிக சேவைகளை அருகே உள்ள அஞ்சலகங்களிலேயே எளிதாகப் பெற முடியும். பிரதம மந்திரி தெரு வியாபாரிகள், சுய சாா்பு நிதித் திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சேவைகள், தேசிய ஓய்வூதியத் திட்டம், பான்காா்டு எடுத்தல் மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளையும் அஞ்சலக மக்கள் சேவை மையம் மூலம் பெற முடியும்.
மேலும், மின்கட்டணம், எரிவாயு கட்டணம் செலுத்துதல், ரயில், பேருந்து, விமான டிக்கெட் முன்பதிவு, செல்லிடப்பேசி மற்றும் டிடிஹெச் ரீசாா்ஜ், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிதாகப் பெற முடியும்.
எனவே, கிராமப்புற மக்கள், முதியோா்கள், பலதரப்பட்ட அன்றாட சேவைகளையும் ஒரே இடத்தில் பெற அஞ்சலக மக்கள் சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.