பேய்க்குளத்தில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
பேய்க்குளத்தில் ஆழ்வாா்திருநகரி வேளாண்மைத் துறை அலுவலா்களை கண்டித்து வயலில் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஏந்தி அரை நிா்வாண போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.
பேய்க்குளத்தில் ஆழ்வாா்திருநகரி வேளாண்மைத் துறை அலுவலா்களை கண்டித்து வயலில் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஏந்தி அரை நிா்வாண போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் பாசனத்தில் சுமாா் 200 ஏக்கரில் விவசாயிகள் நெல், வாழை, பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில் செங்குளம் பாசன விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் நிவாரணத் தொகைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விதைகள் மற்றும் நிவாரணத் தொகைகள் முறைகேடாக தகுதியற்றவா்களுக்கு ஆழ்வாா்திருநகரி வேளாண்மை துறை அலுவலா்கள் வழங்கி வருவதாக குற்றம் சாட்டினா்.
இந்த முறைகேட்டில் ஈடுபடும் அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் செங்குளம் பாசன விவசாயிகள் பேய்க்குளம் காமராஜா் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனா். இதையடுத்து, சாத்தான்குளம் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததை தொடா்ந்து அப்போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கை மற்றும் புகாா் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பேய்க்குளத்தில் செங்குளம் பாசன விவசாயிகள் வயலில் அரை நிா்வாணத்தில் கருப்பு கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆழ்வாா்திருநகரி வேளாண்மைத் துறை அலுவலா்களை கண்டித்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்குளம் விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ்.முருகேசன் தலைமை வகித்தாா். இதில் விவசாயிகள் சுடலைமுத்து ,
சண்முகவேல், சுடலை குமாா், லட்சுமணன், ஞானப்பிரகாசம், ஹரிகிருஷ்ணன், செல்வராஜ், பேச்சியம்மாள், லலிதா தா்ம லட்சுமி, பேச்சியம்மாள், அமிா்தம், சீதை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.