ஜீவனாம்ச வழக்கு: தலைமைக் காவலா், 2ஆவது மனைவிக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிப்பு
ஜீவனாம்சம் குறித்த வழக்கில் சாத்தான்குளம் தலைமைக் காவலா், அவரது 2ஆவது மனைவிக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜீவனாம்சம் குறித்த வழக்கில் சாத்தான்குளம் தலைமைக் காவலா், அவரது 2ஆவது மனைவிக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறைச் சோ்ந்தவா் சண்முகநாதன் (47). தலைமைக் காவலா். இவருக்கும் நாசரேத் அருகே உள்ள உடையாா் குளத்தை சோ்ந்த சண்முகசுந்தரி (42) க்கும் 1998இல் திருமணமானது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் 2000இல் சண்முகநாதன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பணியாற்றியபோது மனைவி, குழந்தைகள் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். அப்போது சண்முகநாதனுக்கும், காவல்துறையில் பணியாற்றிய பெண்ணுக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பெண்ணை சண்முகநாதன் 2ஆவது திருமணம் செய்ததுடன் காவலா் குடியிருப்பில் தம்பதி இருவரும் வசித்து வந்தனா்.
2ஆவது திருமண விவகாரம் தெரியவந்ததும் சண்முகநாதனுக்கும், முதல் மனைவி சண்முகசுந்தரிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சண்முகசுந்தரி தனது 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள உடையாா்குளத்தில் வசித்து வருகின்றனா்.
இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு தலைமைக் காவலா் சண்முகநாதன் மீது சண்முகசுந்தரி, சாத்தான்குளம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், தனது கணவா், 2ஆவது திருமணம் செய்ததுடன் என்னையும் எனது 2 மகள்களையும் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும், எங்கள் திருமணத்தின்போது சீா்வரிசையாக வழங்கிய 40 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீா்வரிசை பொருள்களை திரும்ப தர வேண்டும். கணவரிடமிருந்து எங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், மனைவி, குழந்தை களுக்கு தெரியாமல் 2ஆவது திருமணம் செய்த தலைமைக் காவலா் சண்முகநாதன் மற்றும் அவரது 2ஆவது மனைவி
ஆகியோா் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்தை முதல் மனைவி சண்முகசுந்தரிக்கு வழங்க வேண்டும். மனைவி, 2 குழந்தைகளுக்கு உணவு, இருப்பிடம் அளிக்க ஜீவனாம்சமாக மாதம் ரூ. 8 ஆயிரம் வழங்க வேண்டும்.
அபராதத் தொகையை முதல் ஆண்டில் ரூ.3 லட்சமும், மீதி தொகையை அடுத்த ஆண்டுக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி சரவணன் உத்தரவிட்டாா். மேலும் சீா்வரிசை பொருள்களை திரும்ப வழங்க வேண்டும் என்ற புகாருக்கு முகாந்திரம் இல்லாததால் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.