முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் யூரியா உரம் பதுக்கலை தடுக்க வலியுறுத்தி நூதனப் போராட்டம்

விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் பதுக்கலை தடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்
பகிர்:

விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் பதுக்கலை தடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசும் போது, “விவசாயிகள் ராபி பருவத்தில் விதைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். யூரியா உரம் இந்தியாவில் தட்டுப்பாடாக உள்ள நிலையில், இறக்குமதி மூலம் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு ஏற்படுகிறது.” என்றனர்.

தொடர்ந்து  “ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 2 ஆயிரம் டன் முதல் 3 ஆயிரம் டன் வரை யூரியா உரம் இருப்பு உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். சில்லறை உர விற்பனை நிலையங்களில் யூரியா உரம் இருப்பில் இல்லை. வேளாண்மைத் துறை அதிகாரிகளும், யூரியா உரம் விநியோகஸ்தர்களும் இணைந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செயற்கை உர தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.” எனத் தெரிவித்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கும்போது, விநியோகஸ்தர்கள் 3 மாவட்டங்களிலும் சில்லறை உரக்கடைகளுக்கு உரங்களை விற்பனைக்கு வழங்காமல் பதுக்குகின்றனர். இதன் மூலம் செயற்கை உரம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் யூரியா உரம் கிடைக்காத சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். 3 மாவட்டங்களிலும் யூரியா பதுக்கலை கண்டறிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் பறக்கும் படை அமைத்து சோதனை செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கின்றனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் யூரியா உரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் வழக்குரைஞர் அய்யலுசாமி தலைமையில், கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலர் முத்து, கயத்தாறு ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, சேவா தள நகரச் செயலர் சக்திவிநாயகர், கட்சி நிர்வாகிகள் சண்முகவேல், ராமசந்திரன் ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் நிர்ணய விலையில் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றனர்.

இதில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்குரைஞர் அய்யலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி குட்டிக்கரணம் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டார்.

தொடர்ந்து, கோரிக்கை மனுவை போராட்டக் குழுவினர் கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →