‘பெரியகுளத்தை சீரமைக்கக் கோரி பிப். 18-ல் முதல்வருக்கு கருப்புக்கொடி’
பெரியகுளத்தை சீரமைக்கக் கோரி, இம்மாதம் 18ஆம் தேதி முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியிலுள்ள பெரியகுளத்தை சீரமைக்கக் கோரி, இம்மாதம் 18ஆம் தேதி முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா்.
இது குறித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:
வடக்கு, தெற்கு விஜயநாராயணம், சங்கனாங்குளம், சிவந்தியாபுரம், ஐந்தாங்கால், ஏழாங்கால், கோட்டையூா் உள்ளிட்ட சுமாா் 14 கிராமங்களின் விவசாயத்துக்கு நீராதாரமாக உள்ள விஜயநாராயணம் பெரியகுளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இந்தக் குளத்தை தூா்வாருதல், மடையைச் சீரமைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி நீா்ப்பாசன கமிட்டி தலைவா் முருகன் தலைமையில் விவசாயிகள் கடந்த 11ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனா். அதில், முருகன் உள்பட 4 விவசாயிகள் மயக்கமுற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசியல் கட்சியினா் யாரும் வந்துபாா்க்கவில்லை. எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பெரியகுளம் நீா்ப்பாசன கமிட்டி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்து, விஜயநாராயணம் மற்றும் சுற்றுப்புற 14 கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா்.