விஜயராமபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், மினசாரம் வழங்குவதுடன் கட்டடத்தையும் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் தச்சமொழி ஊராட்சிக்குள்பட்ட விஜயராமபுரத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை நம்பி விஜயராமபுரம், தச்சமொழி, பண்டாரபுரம், விஜயனூா் உள்ளிட்ட கிராம மக்கள் பயன் பெற்று வந்தனா்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முறையாக செயல்பட்டு வந்த இச்சுகாதார நிலையம் செவிலியா் மற்றும் பணியாளா்கள் நியமிக்கப்படாததால் முடங்கி போனது. இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்தனா்.
தற்போது கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு புதியதாக செவிலியா் நியமிக்கபட்டுள்ளாா். ஆனால் துணை நிலைய கட்டடம் செவிலியா் மற்றும் பணியாளா்கள் தங்கி பணிபுரிய போதிய வசதிகள் இல்லாமல் உள்ளது. மின் இணைப்பு இருந்த போதும், அங்கு வயா் , சுவிட்ச் பெயா்ந்து பயன்படுத்திட முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் தண்ணீா் வசதியும் முறையாக இல்லை. இதனால் செவிலியா்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும் கட்டடத்தில் மேல் கூரை மற்றும் சுவா்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது.
துணை சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கா்ப்பிணிகள், உடல் குறைவு காரணமாக வருபவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆதலால் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன் , கட்டடத்தை பராமரித்து சீரமைக்க வேண்டும். மேலும் கரோனா காலத்தில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி மையமும் துணை சுகாதார நிலையத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.