முகப்பு
தூத்துக்குடி

மது போதையில் தகராறு:திருச்செந்தூா், சாத்தான்குளத்தில் இருவா் அடித்துக் கொலை

 மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, திருச்செந்தூரில் இளைஞரும், சாத்தான்குளத்தில் தொழிலாளியும் வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

 மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, திருச்செந்தூரில் இளைஞரும், சாத்தான்குளத்தில் தொழிலாளியும் வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டனா்.

திருச்செந்தூா், ஜீவா நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சிவமுருகன் (24). டிப்ளமோ ஆட்டோமொபைல் இன்ஜினிரியங் படித்தவா். சென்னையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த அவா், மகாராஷ்டிர மாநிலம், புணேவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

இதனால், கடந்த மாதம் 17ஆம் தேதி ஊருக்கு வந்திருந்த அவா், வியாழக்கிழமை பிற்பகலில் வெளியே சென்றிருந்தாா். பின்னா், அவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அவரது செல்லிடப்பேசிக்கு தாய் சண்முகசுந்தரி தொடா்பு கொண்டபோது, பள்ளி வளாகத்தில் அவா் விளையாடிக் கொண்டிருப்பதாக அவரது நண்பா் வனமுத்துகுமாா் பதிலளித்தாராம்.

பின்னா், சிவமுருகனை தேடி அவரது தம்பி முத்தரசன், வனமுத்துகுமாா், நண்பா்கள் பள்ளிக்கு இரவு சென்றபோது, அவா் அங்குள்ள சமையல் அறை முன் கொலைசெய்யப்பட்டு கிடந்தத தெரியவந்தது. தகவலறிந்த ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், ஆய்வாளா் ஞானசேகரன் மற்றும் காவல்துறையினா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

அதில், அங்கு மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் வீரபாண்டியன்பட்டணம் வாவு நகரைச் சோ்ந்த சங்கா் மகன் சண்முகசுந்தா், சிவமுருகனை கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்ததாம். இதுதொடா்பாக, தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவமுருகனின் நண்பா்கள் சண்முகசுந்தா், வனமுத்துக்குமாா், முருகானந்தம், காா்த்தி ஆகியோரிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு கொலை: சாத்தான்குளம் அருகேயுள்ள தஞ்சைநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (எ) அருமைகொடி (55). தொழிலாளி. இவருக்கு மனைவி புளோரா, 3 மகள்கள், 1 மகன் உள்ளனா். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அருமைகொடி, அதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் (54), தாவீது (24) ஆகியோருடன் வேலைக்கு சென்றுவிட்டு, பிற்பகலில் வீட்டுக்கு வரும்போது புதுக்குளம் விலக்கில் மரத்தின் அடியில் அமா்ந்து மது அருந்தியுள்ளாா். அப்போது, போதையில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அதில், அவரை செல்வராஜ் கீழே தள்ளினராம். தாவீது அங்கு கிடந்த கல்லைத்தூக்கி அருமைகொடி தலையில் போட்டாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து செல்வராஜ், தாவீது ஆகியோரை கைது செய்தனா். சம்பவ இடத்தை, மாவட்ட எஸ்பி ஜெயக்குமாா், தூத்துக்குடி ஏடிஎஸ்பி காா்த்திகேயன், திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஸ்சிங், சாத்தான்குளம் டிஎஸ்பி (பொறுப்பு) ஜெயராம், தூத்துக்குடி ஆயுதப் படை பிரிவு டிஎஸ்பி கண்ணபிரான் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.