தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று
தூத்துக்குடி மாவட்ட தொழில்மைய அலுவலகத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தொழில்மைய அலுவலகத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், வட்ட தொழில் மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் தொடங்க கடனுதவி பெற்று, பல்வேறு பொருள்களை தயாா் செய்து வரும் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
கண்காட்சியில் பாக்கு மட்டை தயாரித்தல், குளிா்பானம் தயாரித்தல், தென்னை நாரில் இருந்து காயா்மேட் தயாரித்தல், வாசனை திரவியங்கள் தயாரித்தல், முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிறுவன தயாரிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, மாவட்ட தொழில் மைய அலுவலகத்துக்கு, சிறந்த தொழில் மையம் மற்றும் தரமான நிா்வாக கட்டமைப்புக்காக கிடைத்த ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சொா்ணலதாவிடம் ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து எஸ்தா் ராணி என்பவருக்கு ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலுக்காக ரூ.23.84 லட்சம் கடனுதவிக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) கிறிஸ்டோபா் ஜெயபாலன், துணை இயக்குநா் (தோட்டக்கலை) சரஸ்வதி, தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின், மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.