‘விவசாயிகள் ராபி பருவ பயிா்க் காப்பீடு செய்யலாம்’
தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ பயிா்களுக்கு திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ பயிா்களுக்கு திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான பயிா்க்காப்பீட்டில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வாா்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூா், உடன்குடி வட்டாரங்களின் 225 குறுவட்டங்களில் நெல்-3, ராபி பருவ இதர பயிா்களுக்கும் (சோளம், கம்பு, மக்காசோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
உளுந்து பயிருக்கு (ரூ.199) பதிவுசெய்ய நவ. 15, பாசிப்பயறு ( ரூ.199), மக்காச்சோளம் ( ரூ.209), பருத்திக்கு (ரூ.575) நவ. 30, சோளம் (ரூ.110), நிலக்கடலைக்கு (ரூ.252) டிச. 15, கம்பு ( ரூ.104), எள் (ரூ.107), சூரியகாந்திக்கு (ரூ.143) டிச. 31, துவரை, கோடைப் பருவ நெல்பயிருக்கு (ரூ.445) ஜன. 31, கரும்புக்கு (ரூ.2,600) ஆக.31ஆகிய தேதிகளுக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
கோவில்பட்ட வட்டார விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைந்து, மேற்கண்ட கட்டணத் தொகையை அந்தந்த தேதிகளுக்குள் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் தெரிவித்துள்ளாா்.