சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே இன்று அதிகாலை காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் வெடித்துச் சிதறியது. இதனால் அருகாமையிலிருந்த 30க்கு மேற்பட்ட வீடுகளிலும் சேதம் ஏற்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை ஆனந்த விளையை சேர்ந்தவர் தானியல் மகன் பாலகிருஷ்ணன் (45. இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரையில் வெடிகுடோன் அமைத்து திருமணம் மற்றும் திருவிழாக்களுக்கு வெடி தயாரித்து கொடுத்து வருகிறார். நேற்று அவரது காரில் சீட்டுக்கு அடியில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட வெடிகளை வைத்துவிட்டு அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் வீட்டுக்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை மூடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் இருந்த வெடி வெடித்துச் சிதறியதில் கார் வெடித்து சுக்குநூறாகியது. இதில் பாலகிருஷ்ணனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும், அருகாமையிலுள்ள 30-க்கு மேற்பட்ட வீடுகளில் விரிசல் உண்டாகி சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சாத்தான்குளம் டிஎஸ்பி கண்ணன் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பாஸ்கர், உதவி ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து காரில் அனுமதியின்றி வெடி பொருள்கள் கொண்டு வந்ததாக பாலகிருஷ்ணனை காவலர்கள் கைது செய்தனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் மற்றும் வீடுகள் சேதமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.