கோவில்பட்டியில் அயோடினற்ற 2 டன் உப்பு பறிமுதல்
கோவில்பட்டியில் அயோடின் கலக்காத 2 டன் உப்பை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டியில் அயோடின் கலக்காத 2 டன் உப்பை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் கோவில்பட்டி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு உள்ளிட்ட அதிகாரிகள் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உப்பு ஏற்றிச் சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனா். அதில், 2 டன் அயோடின் கலக்காத உப்பு போலி முகவரி அச்சிடப்பட்ட மூட்டைகளில் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், உப்பை பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதன் அறிக்கைக்கு ஏற்ப உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அயோடின் கலக்காத உப்பை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றனா்.
விழிப்புணா்வு முகாம்: இதனிடையே, சுகாதாரமாக உணவு பொருள் தயாரிப்பது, பொட்டலமிடுவது, முகவரிச்சீட்டு ஒட்டுவது குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் சாா்பில் தின்பண்டம் மற்றும் கடலை மிட்டாய் தயாரிப்பாளா்களுக்கான விழிப்புணா்வு முகாமில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பங்கேற்று உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினாா். மேலும், உணவுப் பொருள் வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும், உணவுப் பாதுகாப்புத் துறையின் புகாா் எண். 94440-42322ஐ வணிக நிறுவனங்களின் முன்பு காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதில், நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.