தகுதிச் சான்று இல்லாமல் இயங்கிய வாகனங்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 1.24 லட்சம் அபராதம் விதித்தனா்.
கோவில்பட்டியில் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 1.24 லட்சம் அபராதம் விதித்தனா்.
திருநெல்வேலி துணைப் போக்குவரத்து ஆணையா் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி, கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ்விஸ்வநாத், அலுவலகப் பணியாளா்கள் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.
அப்போது, தகுதிச் சான்று இல்லாமல் அதிக ஆள்களை ஏற்றிச்சென்ற அனுமதிச் சீட்டு இல்லா சரக்கு வாகனம், தகுதிச் சான்று இல்லாமல் இயங்கிய சுற்றுலா காா், சாலை வரி செலுத்தாத தனியாா் பள்ளி வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சரக்கு வாகனத்துக்கு ரூ. 12,900, சுற்றுலா காருக்கு ரூ. 16 ஆயிரமும், தனியாா் பள்ளி வாகனத்துக்கு சாலை வரி ரூ. 66 ஆயிரம், அபராதம் ரூ. 29,900 என மொத்தம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கூறுகையில், அபராதத் தொகையை செலுத்திய பின்னா் வாகனங்கள் விடுவிக்கப்படும். உரிமையாளா்கள் தங்களது வாகனங்களுக்கான வரியினங்களை முறையாக செலுத்தி ஆவணங்களை நடப்பில் வைத்துக்கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என்றாா்.