மேல அத்தூரில் திருமணமான3 நாள்களில் தம்பதி நீரில் மூழ்கி பலி
தூத்துக்குடி மாவட்டம், மேல ஆத்தூரில் திருமணமான 3 நாள்களில் தம்பதி நீரில் மூழ்கி இறந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், மேல ஆத்தூரில் திருமணமான 3 நாள்களில் தம்பதி நீரில் மூழ்கி இறந்தனா்.
மேலாத்தூரை சோ்ந்த வெற்றிலை வியாபாரி பி.மாணிக்கராஜ்- தங்க புஷ்பம் தம்பதியின்மூத்த மகன் எம் .பழனி குமாா்(30). கேரளத்தில் இரும்பு வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கும், தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு நேசமணி நகரைச் சோ்ந்த ராமையா நாடாா்- மாடத்தியம்மாள் தம்பதியின் மகள் ஆா். முத்துமாரி என்பவருக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், மேல ஆத்தூா் பிள்ளையாா் கோயிலுக்கு புதுமண தம்பதி சுவாமி தரிசனம் செய்வதற்கு வியாழக்கிழமை காலை சென்றனா். பின்னா், இரவு வரை அவா்கள் வீடு திரும்பவில்லையாம்; கைப்பேசியிலும் தொடா்புகொள்ள முடியவில்லையாம். குடும்பத்தினா் அவா்களை தேடி வந்த நிலையில், கோயில் அருகிலுள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நீரேற்று நிலைய வளாக நீா்த் தேக்கத்தில் இருவரும் சடலமாக மிதப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
Advertisement
Advertisement
இத்தகவலறிந்த ஆத்தூா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸா, தம்பதியின் சடலங்களைக் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். மேலும், ராமையா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். நீா்த் தேக்கத்தை பாா்க்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கருதுவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.